இணையத்தில் தேனீ
Wednesday, 20 August 2008
முகப்பு arrow ஆன்மீகம் பகுதி 2
ஆன்மீகம்-2 PDF E-mail
நம்பதவி அடைய நமக்கென்ன வழி
முனைவர் மு. பழனியப்பன்
தமிழ் விரிவுரையாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை, 623 003

அங்கே ஒரு காட்சி தெரிகிறது. அழகான கோவில். அதனுள்ளே ஆண்டவன் அருவுருவ வடிவமாக அமைந்து காட்சி தருகிறான்.  கோயிலில் திருப்பள்ளி எழுச்சி நடைபெறுகிறது. அபிசேகம், அலங்காரம் எல்லாம் சிறப்புடன் நடைபெற்று முடிகின்றன. இந்தக் காட்சியை  மனிதக் கண்கள் இரண்டு காண்கின்றன. எதேச்சையாக ஒரு கன்றுக் குட்டியும் கோயிலின் வெளிப்பகுதியில் நின்று இதே காட்சியைக் காண்கிறது.  மனிதக் கண்கள் காட்சியை உள்ளே பதிய வைக்கின்றன. கன்றுக்குட்டியின் கண்கள் பதியவைக்கத் திறமில்லாமல் கோயில் முழவோசையை மணியோசைகளைக்¢ கேட்டு மருண்டு பார்க்கின்றது.

 ஏன் மனிதக் கண்கள் பதியவைக்கும் காட்சியை கன்றுக் குட்டியின் கண்கள் பதியவைக்க விரும்வில்¢லை.  மனிதக் கண்கள் புறத்தில் தெரிந்த வெளிக்காட்சியை அகத்தில் தெரியும் உள்காட்சியாகப் பதியவைக்கின்றன.  பதியவைக்கும் பழக்கம்¢ அவற்றிற்குத் தரப்பெற்று இருக்கின்றன. இதை அகக்காட்சியாக சேமித்தபின் அந்த சேமித்த காட்சியை மீண்டும் தன்னுள் கொண்டு வந்து தரிசிக்க மனித மனத்தால்  முடிகிறது. அந்தக் காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை ஆராய்ந்து உணரமுடிகிறது.  இந்தச் செயல்கள் கன்றுக்குட்டியின் கண்களில் நடைபெறுவதில்லை.  சேமித்து வைக்க அதற்கு அகக்காட்சி இல்லை. வேண்டுமானால் அதனால் உணவைச் சேமித்து வைத்து மீண்டு¢ம் கொணர்ந்து உண்ணும் பழக்கத்தை பழக்கப்படுத்திக் கொள்ள முடியுமே தவிர காட்சிகளைச் சேமித்து வைக்கத் தெரியாது. அகக்காட்சியில் அதற்கு அருட்காட்சி தெரிவதில்லை. வேண்டுமானால் இது உண்ணும் பொருள் உண்ண இயலாத பொருள் என்ற பதிவை மட்டுமே உணரும் உள்காட்சியைக் கன்றுக்குட்டி பெற்றிருக்க இயலும்.

 மனிதக் கண்களுக்கும் மனித மனத்திற்கும் எப்படி தொடர்பு ஏற்படுகின்றது. வெளிக்கருவியாகக் காணும் கண்கள் அதை எவ்வாறு உடலுக்குள் கொண்டு செல்லுகின்றன.  உடலுக்குள் கொண்டு சென்ற செய்திகள் எங்கே பதிய வைக்கப்படுகின்றன.  ஐம்புலன்கள் வெளிக்கருவிகள் என்றால் உடலுக்குள் உறையும் கருவிகள் என்ன.  இந்தக் கேள்விகளுக்கு உரிய பதில்கள் என்ன

புறக்கருவி கண்ட காட்சிகளை அல்லது செய்திகளை அகக்ருவிகள் பதியவைக்கின்றன. அவ்வகையான  உள்கருவிகள் நான்கு என்று சித்தர் தத்துவம் எடுத்துரைக்கிறது.  மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற இந்த நான்கு உட்கருவிகள்தான் புறக்கருவியான புறக்கண்கள் தந்த காட்சிகளை உள்வாங்குகின்றன. அந்த உள்வாங்கலின் உன்னதத்தில் உள்காட்சி விரிகிறது. தவமாகிறது. தியானம் பிறக்கிறது. மனம் ஒரு முனைப் படுத்தப்படுகிறது. மெய்ப் பொருள் கிட்டுகிறது.  இதனைத்தான் '' மனம் அது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டியதில்லை'' என்றத் தொடர் உணர்த்துகிறது.  மனம் செம்மையாவதற்கு, பழக்கப்படுவதற்கு, ஆண்டவன் தாளை இடையறாது நினைப்பதற்கு மந்திரங்கள் துணைபுரிகின்றன. மனம் தூய்மையாகிவிட்டால் மந்திரம் சொல்லும் வாய் ஆகிய புறக்கருவிக்கு வேலைஇல்லை.  மந்திரத்திற்கும் தேவை இருக்காது.

இவ்வழியில் மனதில் புறக்காட்சியை அகக்காட்சியாக நிறுத்தி நிலைபெறச் செய்ய ஐம்புலன்கள் தேவை. மனதில் காட்சி விரிந்தால் இறைவன் அகப்பட்டுவிட்டால் அதன்வழி அவனை அடைவது எளிதானது என்பது தௌ¤வு.  இதனைப் பெரிதும் விளக்குவனவாக இடைக்காடர் என்ற சித்தரின் பாடல்கள் அமைந்துள்ளன.

 இடைக்காடர் - இடைக்காடு என்னும் ஊரில் இடையர் குடியில் பிறந்தவர் என்பது கருதி அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. மேலும் இவர்பாடல்களில் பசு, ஆடு மாடு போன்றவையும் அவற்றை மேய்க்கும் கோனார்கள் முதலானவர்களும் இடம் பெறுவதால் இடைக்காடர் என்ற பெயர் இவர்தம் பாடல்கள் அடிப்படையில் இவருக்கு மிகவும் பொருந்துவாக உள்ளது.

 சங்க இலக்கியத் தொகுப்பிலும், திருவிளையாடற் புராணத்திலும் இடைக்காடர் என்ற பெயர் கொண்டவர்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அவர்களில் இருந்து இச்சித்தர் வேறானவர். இவர்¢ கொங்கணரின் சீடர் என்ற கருத்தும் உண்டு. இவர் ஒருமுறை ஆடு மாடு மேயத்துக் கொண்டிருக்கும்போது ஒரு சித்தர் வந்தார் என்றும் அவருக்குப் பசியறிந்து இவர் பால் தந்தமையால் இவருக்குச் சித்த ஞானத்தினை அவர் வழங்கியதாகவும் செவிவழிக்கதைகள் இவரைப் பற்றி உண்டு. மேலும் இவர் ஒரு பஞ்ச காலத்தின்போது அதனைத் தணிவிக்க மழையைப் பெய்ய வைத்தார் என்ற கதையும் உண்டு. இவரை இடைக்காட்டுச் சித்தர்,  இடைக்காடனார் என்றும் அழைப்பர்.

 இவர் பாடல்கள் எளிமையும் அதே நேரத்தில் பொருள் தொடர்பையும் உடையன. இவருடைய பாடல் என்ற குறிப்பிடப்படும் ஒரு நெடும்பாடலின் இடையே நெஞ்சோடு கிளத்தல், அறிவோடு கிளத்தல், சித்தத்தோடு கிளத்தல் ஆகியத் தலைப்புகளில் அக உறுப்புகள் குறித்த செய்திகள் இடம் பெறுகின்றன. இச்செய்திகள் வழியாக அகக் கருவிகள் பற்றிய முழுமையான செய்திகளை உணர்ந்து கொள்ளமுடிகின்றது.

அகக் கருவி 1- நெஞ்சம் (மனம்)
 அகக்கருவியில் முதலாவது மனம் அல்லது நெஞ்சம் ஆகும். இது புறக்கருவிகள் தரும் மணம், காட்சி, ஒலி, சுவை, உணர்ச்சி ஆகியவற்றைப் பதிய வைத்துக் கொள்ளுகின்றது. இந்த மணம் என்பது ஒரு பதிவறை என்றே கொள்ளலாம்.

மனம் ஐம்புலன்களின் விருப்பத்திற்கு இடம் கொடுப்பது. ஐம்புலன்களின் ஆளுகையில் இன்பம் காண்பது. அதன் இயல்பைப் பின்வருமாறு நெஞ்சோடு கிளத்தல் என்ற தலைப்பின் கீழ் இடைக்காடர் எடுத்துரைக்கிறார்.
பொன்னிச்சை கொண்டு பூமிமுற்றும் திரிந்தால்
மன்னிச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே!  60
பொய்யான கல்விகற்றுப் பொருள்மயக்கம் கொள்ளாமல்
மெய்யான ஞானக்கல்வியினை விரும்புவாய் கல்மனமே!  61
பேய்க்குரங்கு போலப் பேருலகில் இச்சைவைத்து
நாய்நரிகள் போலலைந்தால் நன்மையுண்டோ கல்மனமே!  62
இரும்பைஇழுக் குங்காந்தத்து இயற்கைபோல் பல்பொருளை
விரும்பினதால் அவைநிலையோ? விளம்புவாய் கல்மனமே!

மனித மனம் கல்மனம். அது தன் நிலையில் இருந்து மாறுவது கடினம். சுயநலம் என்ற கடினத்தன்மை அதனுள் புதைந்துகிடக்கிறது. அந்த நலத்திற்காக எதையும் செய்ய அது துடித்துக் கொண்ட இருக்கிறது. ஆசை கோபம் முதலியன அதன் இழிவான குணங்கள்.

 மனமே உலகம் எல்லாம் உன் ஆணைப்படி நடக்கவேண்டும் என்ற உன்னத நிலையை நீ பெற இயலுமா? முடியாது. அந்நிலையைப் பெற்றவன் பரம்பொருள். அப்பொருளை நீ அறிய முடியும். அந்தப் பொருளின் ஒரு பகுதியாய் நீ இணைய முடியும். ஆனால் நீயோ அந்த எண்ணமே இல்லாமல் இருக்கின்றாய்.

பொன் பொருள் மேல் ஆசை வைத்து பூமி முழுவதும் அதைச் சேர்ப்பதற்காக அலையும் எண்ணமுடைய மனதிற்கு நிலைபேறு என்னும் அழியாப் பேற்றை நோக்கும் வாய்ப்¢பு இருக்காது.  பேருலகை அடையவேண்டும் என்ற செய்தியைக் கேட்டு அதனை அடையவேண்டும் என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தாலும், நாய்போலும் நரி போலும் தன்னாசைக்கும்,  மற்றவரைக் கெடுக்கும் ஆசைக்கும் மறுபுறம் அலைந்தால் என்ன பயன் கிடைக்கும். பேருலகும் கிட்டாது. ஆசையும் நிறைவேறாது. இரும்பை இழுக்கும் காந்தம் போல உலகில் உள்ள சிற்றின்பம் தரக்கூடிய எல்லாப் பொருள்களின் மீதும் ஆசை கொண்டு அலைந்தால் அதனால் பெறப்போகும் பயன் என்ன? அப்படி அந்தப் பொருள்களைப் பெற்றுவிட்டால் அவைதான் நிலையாக இருக்குமா? இவற்றை எண்ணிப் பார்த்து மனமே நீ பொய்யான கல்வியைக் கற்காதே. நிலையிலாப் பொருள்மீது ஆசை வைக்கவே இக்காலக் கல்வி முறை அரங்கேற்றப் படுகிறது. ஆகவே நீ பொய்யான கல்வியைக் கற்றுப் பொருள் மயக்கம் கொள்ளாமல் மெய்யான ஞானக் கல்வியைக் கற்றுத் தேறுவாய்.  அவ்வாறு நீ மெய்ஞானக் கல்வியைக் கற்றுவிட்டால் ஐம்பொறிகளை உன்னால் அடக்கியாள முடியும். அந்த பொறிகளுக்கான கடமைகளைத் தவிர வேறு எதுவும் செய்ய விடாமல் உன்னால் அவற்றைக் காக்க முடியும்.  அவ்வாறு காத்துவிட்டால் பாவ வினைகள் தேய்ந்து நல்வழி கிட்டு¢ம் என்பதில் ஐயமில்லை. ''பேசாது இருப்பதற்குத்தான் கற்ற கல்வியன்றோ வாகான மெய்க்கல்வி வகுத்தறிநீ கல்மனமே! (66)'' என்பது இடைக்காடனாரின் மனதிற்கான இலக்கணம் ஆகும். பேசாது என்பது இங்கு ஐம்புலன்களின் கட்டுப்பாட்டை அறிவிக்கும் பகுதியாகும். 

 இவ்வகையில்   ஐம்புல ஆளுகையில் இருந்து மனித மனம் மீண்டு அதன் ஆளுகையில் ஐம்புலன்களை வைத்திருக்கும் உன்னத நிலை பெற மனத்தை இடைக்காடர் ஆற்றுப்படுத்துகிறார்.

 நெஞ்சம் ஐம்புல ஆளுகையில் இருந்து மீண்டு விட்டது. தௌ¤வு பெற்றுவிட்டது. ஐந்தறிவு கட்டுக்குள் வந்துவிட ஆறாம் அறிவு தன் வேலையைத் தொடங்க வேண்டும். அடுத்து அறிவு என்னும் அகக்கருவி தன் வேலையைத் தொடங்குகின்றது.

அகக் கருவி 2- அறிவு
 அறிவு பற்றிய செய்திகளை அறிவுடன் கிளத்தல் என்ற தலைப்பில் இடைக்காடர் உணர்த்துகிறார்.  ஆண்டவனை அறிதல், ஆன்மாவை அறிதல், ஆண்டவனுக்கும் ஆன்மாவுக்கானத் தொடர்பை அறிதல் என்ற மூன்று நிலைகளில் அறிவு என்ற உட்கருவி வேலை செய்கின்றது எனக் கருதுகிறார் இடைக்காடர்.

ஆண்டவனை அறிதல்
''எல்லாப் பொருள்களையும் எண்ணப்படி படைத்த
வல்லாளன் தன்னை வகுத்தறிநீ புல்லறிவே.  67
கட்புலனுக்கு எள்ளளவும் காணாது இருந்தெங்கும்
உட்புலனாய் நின்றஒன்றை உய்த்தறிநீ புல்லறிவே.  68
அன்னையைப்போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்
முன்னவனைக் கண்டு முக்தியடை புல்லறிவே.  76 ''

ஆண்டவன் அனைத்துப் பொருள்களையும் படைத்தளித்துக் காக்கும் வல்வன். ஆனால் அவன் எந்தப் பொருளின் கண்ணுக்கும் நேருக்கு நேராய்த் தெரியாதவன். என்றாலும் அவ்வெல்லாப் பொருள்களிலும் ஒன்றாய் நிற்பவன்.  உயிர்க்கு முன்னவன். தோற்றுவிக்கப் பட்டப் பொருள்களுக்கு எல்லாம் முன்னவன். எல்லாப் பொருள்களையும் படைப்பதால் அவனே அன்னை. தன்னுள் பிறந்த உயிர்களைக் காக்கும்  அன்னையைப் போல் அவன் விளங்கி அனைத்தையும் தன் குழந்தைகளாகக் காத்துவருகின்றான். மேலும் அவன் ''மெய்யில்ஒரு மெய்யாகி மேலாகிக் காலாகிப் பொய்யில் ஒரு பொய்யாகும் புலமறிநீ புல்லறிவே.  (70)'' என்றவாறு மெய்யினுள்ளும் பொய்யினுள்ளும் இருப்பாகி நிற்கின்றான் என்று இருப்பிடம்¢ காட்டுகிறார் இடைக்காடர். இது ஆண்டவனை அறியும் அறிவாகும்.

ஆன்மாவை அறிவும் அறிவு
''விழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்கம் உண்டாகும்
செழித்திலங்கும் ஆன்மாவைத் தேர்ந்தறிநீ புல்லறிவே.  69 ''

என்ற அடிகள் ஆன்மா உள்ளது என்பதை உயிர்க்கு அறிவிக்கும் பகுதியாகும். உடல் உறக்கம் கொள்கிறது. அது உடல் உறுப்புகள் ஓய்ந்திருக்கும் நிலை என்றாலும் உடலுள் இருக்கும் ஆன்மா உறங்குவதில்லை. அது செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. வெளிக்காட்சிகளில் சிலவற்றை ஒன்று கூட்டி அது கனவாகக் காட்டும் முறை அது விழித்துக் கொண்டே இருக்கிறது என்பதற்கு நல்ல சான்று.

 இந்த ஆன்மாவின் வலிமை எப்படிப்பட்டது என்பதை மற்றொரு அடி உணர்த்துகிறது. ''வாசிக்கு மேலான வாள்கதியுன் னுள்ளிருக்க, யோசிக்கு மேற்கதிதான் உனக்கரிதோ புல்லறிவே.  (75 )''  ஆன்மாவிற்கு சுவாசப்பயிற்சிக்கு மேலான நன்மைகளை அள்ளிவழங்குகிற திறம் உள்ளது.  அதனைக் கண்டறிந்தால் மேலும்¢ நன்மை பிறக்கும்.

ஆன்மாவின் பண்புகள் பலவற்றையும் இதனுடன் இடைக்காடர் சுட்டிச் செல்கிறார். 
இருட்டறைக்கு நல்விளக்காய் இருக்கும்உன்றன் வல்லமையை
அருள்துறையில் நிறுத்தி விளக்காகுநீ புல்லறிவே.  72
நல்வழியில் சென்று நம்பதவி எய்தாமல்
கொல்வழியிற் சென்று குறுகுவதேன் புல்லறிவே.  73
கைவிளக்குக் கொண்டு கடலில்வீழ் வார்போல்
மெய்விளக்குன் னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே.  74
என்று நல்வழி செல்லா ஆன்மாவின் நிலையைச் சுட்டி அவற்றில் இருந்து விலகி நல்வழி எய்த நம்பதவி கிட்டும் என்று வழி காட்டுகிறார் இடைக்காடர். 

இருட்டறையின் நல்விளக்காய் உள்ள ஆன்மா அருள்துறையின் விளக்காக மேம்படவேண்டும். அது கொல்வழியில் புகாமல் நல்வழி புகுந்து நம்பதவி எய்தவேண்டும். நம் என்பது அகங்காரம் அற்ற நிலை. அந்நிலை பெற்ற பதவி எய்த இடைக்காடர் அறிவுறுத்துகிறார். மேலும் மெய்விளக்காக ஆன்மா இருக்க ஏன் துன்பக் கடலில் விழவேண்டும் என்றும் அவர் தொடுக்கும் வினாக்கள் ஆன்மாவை அறிவுறுத்தும் அறிவினாக்கள்  ஆகும்.

ஆன்மாவிற்கும் ஆண்டவனுக்கும் உள்ள தொடர்பை அறிதல்
 ஒவ்வொரு ஆன்மாவின் உள் விதையாய் முளையாய் ஆண்டவன் அமைகிறான். அந்த முளையைச் சரியான வழியில் வளர்த்துச் செடியாக்கி மரமாக்கி மேலும் பழுக்க வைப்பதன் மூலம் நம்பதவி அடைய முடியும்.  ஆண்டவன் ஆன்மாவின் உள் அமைந்த நிலையை,
''ஆத்துமத்தின் கூறான அவயவப்பேய் உன்னுடனே
கூத்துபுரிகின்ற கோள் அறிவாய் புல்லறிவே.  (71 )''
என அறிவிக்கின்றார் இடைக்காடர்.

 அவயவம் என்பது நிலையான இருப்பிடம் என்ற பொருளில் அமைவது. ஆத்துமத்தின் ஒரு கூறாக நிலையான இருப்பிடம் தரும் ஆண்டவன் அமைந்து அவன் கூத்து புரிகின்றான்.  அந்த குணத்தை ஆன்மாவே நீ அறிந்து கொள் என்ற அடையாளங்காட்டல் இடைக்காடனாரின் சிறப்பாகும். மனம், அறிவு (புத்தி) இவற்றைத் தொடர்ந்து சித்தம் குறித்த செய்திகளைத் தொடர்ந்து அவர் அறிவிக்கின்றார்.

அகக் கருவி 3- சித்தம்
 தௌ¤வான மனக் கொள்கை சித்தம் ஆகும். மனதால் உணர்ந்ததை அறிவு வயப்படுத்தி அதன்பின் மனதாலும் அறிவாலும் அறிந்த கொள்கை முடிபுகளை நிலை நிறுத்திக் கொள்வது சித்தம் ஆகும்.

  ''அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீபற - பர
ஆனந்தம் கண்டோ ம் என்று தும்பீபற!
மெய்ஞ்ஞானம் வாய்த்தென்று தும்பீபற - பர

மேலேறிக் கொண்டோ ம் என்று தும்பீபற!  77
அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற''

என்பது சித்தத்தின் தௌ¤வைக் காட்டுவதாகும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞ்ஞானம் வாய்த்து ஆனந்தம் காணும் நிலை சித்தநிலை ஆகும்.  இந்த நிலையை அடைந்துவிட்டால் துன்ப வலை இல்லை. மேலேற்றம் உண்டு.

 இ¢ம்மேலேற்றநிலை பெற்றமைக்கு அமைந்த படிநிலைகளைப் பின்வரும் செய்யுளடிகள் விளக்குகின்றன. இவை முன்பே விளக்கப் பட்டவை என்றாலும் அவற்றை ஒருங்குகூட்டி இந்தப் பாடல் தருகின்றது.
       - பரஞ்
சோதியைக் கண்டோ ம் எனத் தும்பீபற!  78
ஐம்பொறி அடங்கினவே தும்பீபற - நிறை
அறிவே பொருளாம் எனத் தும்பீபற!
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற - ஒரு
தெய்வீகம் கண்டோ ம் என்றே தும்பீபற!  79
மூவாசை விட்டோ மென்றே தும்பீபற - பர
முத்தி நிலை சித்தியென்றே தும்பீபற!

ஐம்பொறி அடக்கி, நிறை அறிவே பொருளாகி முக்தி நிலை காணும் பேறே சித்தநிலை ஆகும். மேலும் சித்தநிலையில் தௌ¤வாகக் கண்ட மெய்மைகளைப் பின்வருமாறு இடைக்காடர் பட்டியல் இடுகின்றார்.

 தேவாசை வைத்தோமென்று தும்பீபற - இந்தச்
செகத்தை ஒழித்தோம் என்று தும்பீபற!  80
பாழ்வெளியை நோக்கியே தும்பீபற - மாயைப்
பற்றற்றோம் என்றேநீ தும்பீபற!
வாழ்விடம் என்றெய்தோம் தும்பீபற - நிறை
வள்ளல்நிலை சார்ந்தோமே தும்பீபற!  81
எப்பொருளும் கனவென்றே தும்பீபற - உல
கெல்லாம் அழியுமென்றே தும்பீபற!
அப்பிலெழுத் துடலென்றே தும்பீபற - என்றும்
அழிவில்லாதது ஆதியென்றே தும்பீபற!  82

இவ்வடிகள் மூலமாக ''உலகப் பொருள்கள் அனைத்தும் அழியும் மாயப் பொருள்கள் ;  ஆதியாகிய இறைவனே அழியாதவன் என்பதும், உலகப் பற்று நீங்கவேண்டும்'' என்பதும் ஆகிய உண்மைகள் தெரியவருகின்றன. அதாவது மூவகை மலங்களான ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றில் மாய உலகத்தின் இயல்பை மேற்காண் வரிகள் காட்டுகின்றன. இந்த மாயையை அறியும் அறிவே சித்தம் ஆகின்றது.

மாயா மலத்துடன் ஆணவமும்  கன்மமும் கலந்து நிற்க வாய்ப்புள்ளது. இந்த அகக் கருவிகளின் இயல்புகளைச் சித்தம் தொடர்பான செய்திகளோடே இடைக்காடர் தருகிறார்.

அகக் கருவி 4- அகங்காரம்
ஆணவங்கள் அற்றோம் என்றே தும்பீபற!
தொல்லைவினை நீங்கிற்று என்றே தும்பீபற (78)
என்ற இவ்வரிகள் ஆணவ மலத்தையும் கன்ம மலத்தையும் குறிப்பனவாகும்.  தொல்லைவினை என்பது கன்ம வினை. அதுவும் மூலமலமாக இருக்கும் ஆணவமமும் நீங்க நம் பதவி அடைய இயலும்

 அறிய அறிய அறியாமை தோன்றும். அதுபோல அறிய அறிய ஆணவமும் மிகுகின்றது. இந்த ஏறுவரிசையை இறங்கு முகமாக ஆக்கினால் நந்நிலை கிட்டும் என்பதில் ஐயமில்லை.

 இந்நான்கு கருவிகள் சைவ சித்தாந்தத்திலும் ஏற்கப் படுகின்றன.  அந்தக்கரணம் அவற்றில் ஒன்று அன்று என்பது சிவஞான போதம். ''அளப்பெறும் கரணங்கள் நான்கும் சிந்¬யே ஆக '' (திருத்தொண்டர்புராணம் 252) என்பது பெரிய புராணம்.  சித்தர் நெறி உண்மையானவை என்பதற்கு இத்துணை அடிகள் காட்டு.

 இவ்வாறு விரிக்க விரிக்க உண்மைப் பொருளை மேலும் விளங்க வைப்பவை சித்தர் பாடல்கள். இவற்றை அடியொற்றி வாழ்க்கை வாழ்ந்து பொருள் சம்பாதிக்கின்ற கல்வியை விடுத்துத ஞானக் கல்வி வேண்டி நின்றால் உலகம் உன்னதம் பெறும். அகக்கருவிகளும் புறக்கருவிகளும் கூட்டிணைவால் ஆண்டவனை அடையச் செய்யும். அவ்வழி உலக உயிர்களுக்குக் கிட்டுவதாகுக.

உதவியவை
மதுரைத்திட்டத்தின் இணையதளம் வழியாகச் சித்தரபாடல்களின் மூலத்தை அறியமுடிந்தது.

M.Palaniappan
manidal.blogspot.com
puduvayalpalaniappan.blogspot.com