|
leomohan
|
 |
« on: June 08, 2009, 01:31:28 AM » |
|
டிவென்டி 20 உலகக் கோப்பை போட்டியில் கம்பீர், யுவராஜ் சிங் மற்றும் ஓஜாவின் அபார ஆட்டதால், வங்கதேசத்தை 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
நாட்டிங்காமில் நேற்றிரவு நடைபெற்ற டிவென்டி 20 உலகக் கோப்பைக்கான 4-போட்டியில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியும் வங்கதேச அணியும் மோதின.
இப்போட்டியில் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
அந்த அணியின் ஜுனைத் சித்திக் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். நயீம் இஸ்லாம் 28 ரன்கள் எடுத்தார் ரகிபுல் ஹசன் 16 ரன்களையும், துவக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் 15 ரன்களையும் சேர்த்தனர்; அஷ்ராபுல், மோர்ட்டஸா மற்றும் ரஹீம் ஆகியோர் தலா 11 ரன்கள் எடுத்தனர்.
இந்தியத் தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய ஓஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, அணியின் வெற்றியை உறுதி செய்தார். இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுகளையும், ஜாகீர் கான் மற்றும் யூசுப் பதான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இறுதியில், இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகியுள்ளது.
முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட் செய்த தோனி தலைமையிலான இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.
அணியின் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் 46 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்; யுவராஜ் சிங் 18 பந்துகளில் 41 ரன்கள் குவித்து அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தினார். ரோகித் ஷர்மா 36 ரன்களையும், தோனி 26 ரன்களையும் எடுத்தனர்; இர்பான் பதான் ஆட்டமிழக்காமல் 11 ரன்கள் எடுத்தார்; சுரேஷ் ராய்னா 10 ரன்கள் எடுத்தார்.
வங்கதேசம் தரப்பில் நயீம் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும், ருபெல் ஹுஸைன், ஷஹாதத் மற்றும் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
காயம் காரணமாக, விரேந்திர சேவாக் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.
இப்போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஓஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்திய அணி தனது அடுத்த லீக் சுற்றில் வரும் 10-ம் தேதி அயர்லாந்து அணியுடன் மோதுகிறது.
நன்றி http://www.vikatan.சொம்/
|